ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (40). இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்த தனது மாமன் மகள்களான தென்னரசி (32), அவரது தங்கை தாமரைச்செல்வி (30) ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார். இதில் கரிச்சான்குண்டு கிராமத்தில் முதல் மனைவி தனது மகளுடனும், பனைக் குளத்தில் 2-வது மனைவி மகனுடனும் வசித்து வருகின்றனர். பாண்டி சில மாதங்களாக முதல் மனைவி வீட்டில் தங்கினார். அந்த வீட்டின் எதிரில் பாண்டியின் அக்காள் தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார். அப்போது பாண்டி அடிக்கடி அக்காள் வீட்டுக்கு சென்று வந்த நிலையில் அவரிம் 16 வயதுடைய மூத்த மகளுடன் நெருக்கம் காட்டினார். மேலும் வாட்ஸ்-அப் மூலம் ஆசைவார்த்தை கூறி குறுந்தகவல்களை அனுப்பி உள்ளார். அதில், நாம் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என அந்த சிறுமியை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

பாண்டி கூறிய வார்த்தைகளை அந்த சிறுமி நம்பிய சூழலில் 31ம் திகதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் பாண்டியும் தனது முதல் மனைவியின் மகள், 2-வது மனைவியின் மகனுடன் மாயமாகி இருந்தார். இது முதல் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது உதவியின் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பாண்டியின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்ததில் அவர், தஞ்சாவூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பொலிசார் சென்று பார்த்த போது அங்கு 16 வயது சிறுமி, மகன், மகளுடன் இருந்த பாண்டியை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் 2 குழந்தைகளும் அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிசில் பாண்டி அளித்த வாக்குமூலத்தில்,
16 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் தஞ்சாவூருக்கு சென்ற அவர்கள் அங்குள்ள லாட்ஜில் தங்கி குடும்பம் நடத்தியதும் தெரியவந்துள்ளது, தொடர்ந்து பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
