என்னையும் என்கவுண்டர் பண்ணுங்க ! பிரியங்கா வழக்கில் உயிரிழந்த குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி கதறல்

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா சீரழிக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது  இது தொடர்பில் பொலிசார் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இன்று அதிகாலை பொலிசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்ப முயற்சித்ததால் என் கவுண்ட்டரில் நால்வரும் உயிரிழந்தனர். இது குறித்து முக்கிய குற்றவாளி முகமது பாஷாவின் தாய் கூறுகையில், என் மகன் போய்விட்டான், இது தவறு தான்.

இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என கூறினார். சிறுவனான ஷிவாவின் தாய் கூறுகையில், என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டும் அவனை என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள் என அழுதபடி கூறினார். ஷிவாவின் தந்தை கூறுகையில், அது ஏன் இந்த வழக்கில் மட்டும் நால்வருக்கும் இது போன்ற தண்டனை கொடுக்கப்பட்டது? இதே போல மற்ற வழக்குகளிலும் தண்டனை தர வேண்டும் என கூறினார். அதே சமயம் நவீன் தந்தை கூறுகையில், நான் ஏற்கனவே கூறியதை போல என் மகன் உள்ளிட்ட நால்வரையும் சிறையில் அடைக்காமல் முதலிலேயே போட்டுத்தள்ள வேண்டும்.

ஆனால் கடைசியாக ஒரு முறை மகனை பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என கூறினார். சின்னகேசவலுவின் தாய் ஜெயம்மா முன்னர் அளித்த பேட்டியில், என் மகன் மீது தவறு நிரூபனமானால் அவனையும் என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறிய நிலையில் தற்போது கருத்து கூறவில்லை. ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கும் சின்னகேசவலுவின் மனைவிக்கு கணவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழுது கொண்டே பேசிய அவர், எங்களுக்கு திருமணமான ஒரு வருடத்துக்குள் என் கணவர் என்னை விட்டு போய்விட்டார். அவர என்கவுண்டர் பண்ண இடத்துக்கு என்னையும் அழைத்து சென்று என்கவுண்டர் பண்ணுங்க, அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என கதறினார்