மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்து, நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புக்கு சென்ற போது சிவகாசியை அடுத்த திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார் என்ற மாணவனுடன் நட்பு ஏற்பட்டது.ஒரு மாத பயிற்சி முடிவதற்குள்ளாகவே நட்பு காதலாக மலர்ந்தது. கண்களில் நுழைந்து இதயம் புகுந்த காதலி சிந்துஜா, ஏழை வீட்டு பிள்ளை என்பது அப்போது ராம்குமார் கண்களுக்கு தெரியவில்லை.
ராம்குமார் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், சிந்துஜா வேறு ஒரு தனியார் கல்லூரியிலும் பி.இ படிப்புக்கு சேர்ந்தனர்.கடந்த 4 வருடங்களாக படிக்கின்ற சாக்கில் மதுரையை வலம் வந்த இந்த காதல் ஜோடி முகநூல் மூலமாகவும் வாட்ஸ் ஆப் மூலமாகவும் காதலை வளர்த்து வந்தது.டப்மாசிலும், டிக்டாக் மியூசிக்கலி ஆப்பில் தங்களது காதலின் ஆழத்தை புகைபடங்களாக பரிமாறிக்கொண்டனர்.இவர்களின் காதல் விவரம் ராம்குமாரின் குடும்பத்திற்கு தெரியவர, அவரது தாயார் விருப்பபடி சிந்துஜாவை வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளார் ராம்குமார்.
சிந்துஜாவை அவரது குடும்பத்தினருக்கும் பிடித்து போனதால், இருவரும் வேறு வேறு சாதி என்றாலும் காதலுக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லைஇந்த நிலையில் ஆடிமாதம் முதல் நாள் சிந்துஜாவின் வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்பதற்காக ராம்குமாரின் குடும்பத்தினர் புறப்பட்டு சென்றுள்ளனர்.திருவாதவூரில் சிந்துஜாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை பார்த்து சிந்துஜா மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சிந்துஜாவை தங்கள் மகனிடம் இருந்து பிரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் ராம்குமார் குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டதாகவும், பின்னர் சிந்துஜாவிடம் பேசுவதை ராம்குமார் குறைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் கடந்த 4 வருடமாக உருகி உருகி காதலித்த சிந்துஜாவை, ராம்குமார் தூக்கி வீசும் வகையில் பேசியதாக கூறப்படுகின்றது.கடந்த 4 வருடங்களில் காதலன் ராம்குமாருக்கு மனதை மட்டுமல்லாமல் அதற்கும் மேல் அவன் விரும்பியதை எல்லாம் விட்டுக்கொடுத்த சிந்துஜாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல்தனது கையில் பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி அதனை படம் எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகும் காதலனிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் விரக்தி அடைந்த சிந்துஜா , கடந்த 31 ந்தேதி பேரீச்சம் பழத்தில் எலிமருத்தை கலந்து சாப்பிட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த சிந்துஜா புதன்கிழமை மாஜிஸ்திரேட்டு முன்பு தனது தற்கொலை முடிவுக்கு காதலன் ராம்குமாரும் , காதலனின் குடும்பத்தாரும் தான் காரணம் என்று மரண வாக்குமூலம் அளித்துவிட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சாதி கடந்த காதல், ஏழை வீட்டு பிள்ளை என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கப்பட்ட கொடுமையால் எலிமருத்துக்கு இறையாகி உள்ளது என்கின்றனர் உறவினர்கள்.இது தொடர்பாக விசாரிக்க மாணவன் ராம்குமாரின் செல்போனுக்கு அழைத்த போது அது சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்தது.காதல் தோல்விக்கு தற்கொலை எப்போதும் தீர்வாகாது, தவிக்கவிட்டுச் சென்றது காதலனோ, காதலியோ… அவர்கள் முன்பு சமூகத்தில் நாமும் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை இன்றைய இளையதலைமுறையினர் உணர்ந்தால் இது போன்ற விபரீத நிகழ்வுகளுக்கு முற்றுபுள்ளி உண்டாகும்.