ஆழ்துளை கிணற்றி விழுந்த சுர்ஜித் கடைசி வரை மீளாமலேயே போய் விட்ட சோகத்தில் அவன் அண்ணன் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளான். பிரிட்டோ ஆரோக்கியதாஸ் – கலாமேரி தம்பதிக்கு 2 மகன்கள். இதில் இளையவன் தான் குழந்தை சுர்ஜித். எப்படியாவது வந்து விடுவான் என்ற பெரும் நம்பிக்கையில் தான் அத்தனை பேரும் நேற்று இரவு தூங்கப் போனார்கள். ஆனால் காலையில் துயரச் செய்தியுடன் அத்தனை பேரையும் அழ வைத்து விட்டது குழந்தை. இதனால் மீளாத் துயரில் தமிழகம் மூழ்கிக் கிடக்கும் நிலையில் சுர்ஜித்தின் உடல் சற்றுமுன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் குழந்தை சுர்ஜித்தின் மரணச் செய்தி அவனது அண்ணனை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தம்பி திரும்பி வருவான் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். ஆனால் கடைசி வரை தம்பி மீளவேயில்லை என்பது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதிர்ச்சிகளை சந்திக்கக் கூடிய வயதில் அவன் இல்லை. எனவே அவனால் தனது உணர்ச்சிகளை

எப்படிக் காட்டுவது என்று கூட தெரியவில்லை. தம்பியைக் காண முடியாத ஏக்கம் அந்த சிறுவனின் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை
கவலை தோய்ந்த விழிகளுடன் தனது உறவினர் பிடியில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் அண்ணன். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.
