பிரியாங்கா சடலம் அருகில் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை! சம்பவம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் வேதனை

இந்தியாவை உலுக்கியுள்ள ப்ரியங்கா ரெட்டி வழக்கில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தன்னை நிலைகுலைய செய்துவிட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் விலங்குகள் நல மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். இறப்பதற்கு முன் அவரை சீரழித்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிரியங்காவின் உள்ளாடை, செருப்பு மற்றும் அடையாள அட்டையை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். நாட்டை உலுக்கியுள்ள இச்சம்பவம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், டாக்டர் பிரியங்கா ரெட்டி சம்பவம் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது.

ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. ஹைதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும். மனமார்ந்த இரங்கலை அந்தக் குடும்பத்துக்கு உரித்தாக்குகிறேன். நான் கர்மாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.