3 வருஷமா என்னை யாரும் தடுத்து நிறுத்துனது இல்லை! காலையில் டிரைவிங் மாலையில் கல்லூரிப் படிப்பு என்று அசத்தும் இளம்பெண்

இளம் பெண் சாரதி ஒருவர் பேசும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் டெலிஷா டேவிஸ். இவர் முதுகலை கல்லூரி மாணவி.காலையில் டிரைவிங் மாலையில் கல்லூரிப் படிப்பு என பேலன்ஸ் செய்து வருகிறார். தேர்வுகள் முடிந்தநிலையில் தற்போது ரிசல்ட்-காக காத்திருக்கிறார்.

டெலிஷா டேவிஸ் அப்பா டேங்கர் லாரி ஓட்டுநர் 40 வருடமாக அவர் இந்த பணியை செய்துவருகிறார். தந்தையை பார்த்து தான் டெலிஷாவுக்கு லாரி ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. கேரள சாலைகளில் அசால்டாக டிரைவிங் செய்யும் டெலிஷா டூ-வீலர், ஃபோர் வீலர், 6 சக்கரங்களை உடைய வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸூம் வைத்திருக்கிறார். ஒரு நாளைக்கு 300 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் டெலிஷாவிடம் உங்களுக்கு இது கடினமாக இல்லையா என கேட்டால், இந்த வே லையை நான் காதலிக்கிறேன் அப்புறம் எப்படி கடினமாக இருக்கும் என பதிலளிக்கிறார்.

அவர் பேசுகையில், ‘அதிகாலை 2.30 மணிக்கு லாரியை எடுத்துக்கொண்டு இரும்பனம் புறப்படுவோம். கம்பெனி காலையில் திறப்பார்கள். அங்கிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை டேங்கரில் ஃபுல் செய்துக்கொண்டு மலப்புரம் மாவட்டம் திரூர் பயணமாவோம். வழியில் எங்கும் லாரியை நிறுத்த மாட்டோம். வண்டியில் இருக்கும் சரக்கை இறக்கிவிட்டால் மீண்டும் திரும்பி விடுவோம்.

3 வருஷமா என்னை யாரும் தடுத்து நிறுத்துனது இல்லை. டேங்கர் லாரி அத்தியாவசிய பொருள் என்பதால் போலீஸார் நிறுத்த மாட்டார்கள். இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் போலீஸ் லாரியை நிறுத்துனாங்க. ஊரடங்கு காலத்துல ஒரு சின்னப்பொன்னு லாரியை ஓட்டிக்கிட்டு ஹைவேஸ்ல போறதா யாரோ ஆர்டிஓ சொல்லி இருப்பாங்க போல அதனால போலீஸ் நிறுத்துனாங்க.

நான் என்கிட்ட இருந்த ஹெவிலைசென்ஸை காட்டியதும் அவங்களுக்கு ஷாக். அவங்க என்ன பாராட்டுனாங்க. மீடியாவுக்கு அவங்கதான் தெரியப்படுத்துனாங்க. நான் 3 வருஷமா டேங்கர் லாரி ஓட்டுறேன் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

கேரளாவிலே அபாயகரமான பொருள்களை கொண்டு செல்லும் வாகனத்தை ஓட்டும் உரிமம் வைத்துள்ள பெண் நீ தான் அப்படின்னு அவங்க சொன்னாங்க என்று அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.