உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் வீட்டில் நேர்ந்த சோகம்..! ட்விட்டரில் பில்கேட்சின் உருக்கமான பதிவு!!

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ஆவார். பில்கேட்ஸ் ஒரு அமெரிக்க வணிக அதிபர், மென்பொருள் உருவாக்குநர், முதலீட்டாளர் மற்றும் பரோபகாரர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் தலைமை மென்பொருள் கட்டிடக் கலைஞர் பதவிகளை வகித்தார். பில்கேட்ஸின் தந்தையான வில்லியம் ஹெச்.கேட்ஸ் நேற்று முன்தினம் காலமானார், அவருக்கு வயது 94.

வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் கடற்கரை இல்லத்தில் வசித்து வந்த வில்லியம் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தன் தந்தை குறித்துப் பகிர்ந்துள்ள பில்கேட்ஸ், என் தந்தையின் ஞானம், தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவை உலக அளவில் பல மக்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஆரம்பக் காலங்களில் முக்கியமான கட்டங்களில் சட்டரீதியான ஆலோசனைகளைக் கேட்க என் அப்பாவைத்தான் அணுகினேன்.

 

எங்களுடன் இணைந்து, விவேகமாகச் செயல்பட்டு, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டினார் என் தந்தை. எனக்கு வயது ஆக ஆகத்தான் கிட்டத்தட்ட நான் செய்யும் அனைத்து விஷயங்களிலும் என் அப்பாவின் தாக்கம் மறைமுகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து சந்தோஷப்பட்டேன். அப்பாவின் இழப்பை நான் ஒவ்வொரு நாளும் உணர்வேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.