காதல் கணவருடன் சென்ற மகள்… அழுது புரண்ட பெற்றோர்: கண் கலங்க வைக்கும் சம்பவம்..!

ராசிபுரம் அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அவர்கள், பாதுகாப்பு கோரி போலீசாரிடம் தஞ்சமடைந்தது. இதையடுத்து, இருவரும் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி விஜயன் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பவதாரணி , கணவர் மணியுடன் தான் செல்வேன் என தெரிவித்தார்.

இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால், சட்டப்படி அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி கூறினார். இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முற்பட்டனர்.

அப்போது அங்கு வந்த பவதாரணியின் பெற்றோர் தங்களது மகளை கீழே இறக்கி விட்டு செல்லுமாறு வாகனம் முன்பு படுத்து அழுது புரண்டனர். இதையடுத்து, காதல் ஜோடியை போலீசார் வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

பின்னர், பவதாரணியின் பெற்றோரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.