ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். கைலாசா நாட்டை உருவாக்கி வருவதாக கூறிய நித்தியானந்தா, கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், தங்கத்தில் அச்சடிக்கப்பட்ட 5 விதமான கரன்சிகள் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும், விவசாயம் செய்ய நிலம் வேண்டும், துணிக் கடை வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அடுத்தடுத்து கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் கைலாசாவில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்க கோரி விண்ணப்பித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
