தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர் சித்ரா. சித்ராவுக்குத் திருமணமாகி 15 ஆண்டு காலம் கழித்துப் பிறந்த செல்ல மகள் நந்தனா. ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்த தனது மகளை விட்டுப் பிரியாமல் பாசத்துடன் வளர்த்து வந்தார் சித்ரா. எங்கு போனாலும் மகளையும் உடன் அழைத்துச் செல்வார். மகளுக்காகவே பிரத்யேகமாக பாடல்கள் பாடி டிவிடி வடிவில் வீட்டில் வைத்திருப்பார்.

தான் ஒருவேளை மகளை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனால் இந்த டிவிடியை கேட்குமாறு வீட்டில் சொல்லி விட்டுச் செல்வார் சித்ரா. அந்த அளவுக்கு சித்ராவின் குரல், நந்தனாவுடன் இருந்து கொண்டே இருக்கும். ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்தாலும், தனது மகளை சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்த்து வந்தார் சித்ரா. சென்னையில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்திருந்தார். கடந்த 2011ல் நந்தனாவுக்கு 8 வயதாக இருந்த போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சித்ரா தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு செல்வதற்காக சித்ராவும், அவரது குடும்பத்தினரும் அப்போது தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது தாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்கதவு திறந்திருப்பதும், மகள் நந்தனா வீட்டில் இல்லாததும் அவர்களுக்கு தெரியவந்தது. பின்னர் வெளியே தேடிப்பார்த்தபோது, நீச்சல் குளத்தில் நந்தனா மிதந்தபடி சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்தபோது சித்ராவும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

எனினும் அனைவரும் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது நந்தனா யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே சென்றதாகத் தெரிகிறது.
குழந்தைகளுக்கு பெரிதும் பரிச்சயமில்லாத அந்த இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா தவறி விழுந்தது தெரியவந்தது. இதன் பின்னர் தனது குழந்தையை சித்ரா மடியில் கிடத்தி கதறி அழுதது அத்தனை பேரையும் உருக்கி விட்டது. நீண்ட காலம் கழித்து கடவுள் தனக்கு வரத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு விட்டாரே என்று கதறி அழுதார் சித்ரா.

இதன்பின்னர் சில காலம் கழித்து சித்ரா பேசுகையில், 15 ஆண்டுகள் நான் தவமிருந்து பெற்ற குழந்தை, என் உயிரே நந்தனா தான், அவளுடைய இ ழப் பால் உண்டான வ லியு ம் , சோகமும் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஆறாத வடு அது, அப்போ இனி வாழ்க்கையில் எல்லாமே முடிஞ்சிடுச்சு, இசைப்பயணத்தையே நிறுத்திடலாம் என்று முடிவெடுத்தேன். அந்த மிகப் பெரும் துயரத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை,

ஆனால் என் குடும்பத்தினர், இசைத்துறையினர், நண்பர்கள் என பலரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள், அவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று உணர்ச்சிகரமாக கூறினார்.தனது மகளின் மறைவையடுத்து மகள் நினைவாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சித்ரா. அந்த வகையில் கேரளாவின் பருமுலோவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில் கீமோ தெரபி சிகிச்சைப் பிரிவை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.