கோவில்பட்டி குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோலைராஜ். இவர் அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார். விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரும் அதே உப்பளத்தில் பணிபுரிந்தார். இந்நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது பின்னர் காதலாக மாறியது. இருவரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காதலித்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராவிதமாக இவர்களின் காதல் விவகாரமானது, இரு வீட்டிலும் தெரியவந்தது. இருவீட்டாரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள்.ஆனால் பெண் பறையர் சமுதாயத்தையும் ஆண் பள்ளர் சமுதாயத்தையும் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த காதலுக்கு தொடக்கத்தில் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் சோலை ராஜ் குடும்பத்தினர் திருமணத்தை ஆதரித்தனர். அவர்கள் வீட்டருகே ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்தனர். இந்த நிலையில் இன்று காலை நெடுநேரமாகியும் சோலைராஜும், ஜோதியும் வீட்டில் இருந்து வெளியேவரவில்லை. இதனால் சந்தேகித்த அக்கம்பக்கத்தினர், வீட்டினை உடைத்து சென்றனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக மிதந்து கொண்டிருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்குமாறு, சோலைராஜும் அவருடைய உறவினர்களும் அரசு பொது மருத்துவமனை வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர். அப்போது தனது மகள் சோலைராஜாவை காதலிப்பது தங்களுக்கு பிடிக்கவில்லை என்று கண்டித்ததாக கூறினார். இந்த நிலையில் சோலை ராஜா மூலமாக ஜோதி கர்ப்பமானது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட நிலையிலும் ஆசை ஆசையாக வளர்த்த மகள் தங்கள் விருப்பத்தை
மீறியதால் இப்படி செய்துவிட்டதாக ஜோதியின் தந்தை போலீசிடம் கூறியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஜோதி கர்ப்பமாக இருந்ததை சோலை ராஜா உறவினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். பெற்ற மகள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் ஜாதி வெறியில் தந்தை செய்த செயல்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
