பனப்பாக்கத்தை அடுத்த பாணாவரத்தில் உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோதண்டன் (52). இவரது மனைவி சாந்தா (49), பாணாவரம் ரயில் நிலையம் அருகே இட்லிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு பிரகாஷ் (25) என்ற மகனும், பிரியா (19) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பிரகாஷ் பெங்களூருவில் வேலைபார்த்து வருகிறார். பிரியா, நாடக நடிகையாக இருந்து வந்தார். கோவில் திருவிழாக்களில் அவரது குழுவுடன் சேர்ந்து நாடகங்களில் நடிப்பார். மற்ற நேரங்களில் தாயார் நடத்தி வரும் இட்லிக்கடையில் அவருக்கு உதவியாக இருப்பார். நேற்று முன்தினம் சாந்தா மட்டும் இட்லிக்கடையில் இருந்தார்.

வியாபாரம் முடிந்து வீட்டிற்கு சென்றபோது பிரியா அங்கு இல்லை. அவர் பல நேரங்களில் தாயாரிடம் சொல்லாமல் நாடகத்தில் நடிக்க சென்று விட்டு வீட்டுக்கு திரும்புவார். அதன்படி நாடகத்திற்கு சென்றிருக்கலாம் என தாயார் சாந்தா நினைத்து விட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது. கதவை திறக்க முயன்றபோது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

கதவை தட்டியும் திறக்கப்படாததால், சாந்தா அருகில் உள்ளவர்களை அழைத்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பிரியா தூக்குக்கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு சாந்த அதிர்ச்சியில் உறைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவத்திற்க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
