விளையாட்டாக DNA சோதனை செய்துகொண்ட ஒரு குடும்பம்: காத்திருந்த இரட்டை அதிர்ச்சி!

மகள் பரிசாக வாங்கிக் கொடுத்த ஒரு DNA சோதனைக் கருவியை பயன்படுத்தி சோதனை செய்துகொண்ட ஒரு குடும்பம், தங்கள் மகள் உண்மையில் தங்கள் மகள் அல்ல என்ற உண்மையை அறிந்து கொண்டதோடு, அவளது தந்தை யார் என தெரியவந்தபோது இரட்டை அதிர்ச்சிக்குள்ளாகினர். அமெரிக்காவின் Delawareஐச் சேர்ந்த Joseph Cartelloneம் அவரது மனைவி Jenniferம் செயற்கை கருத்தரித்தல் முறையில் பெற்றெடுத்த மகள் Rebecca. செயற்கை கருத்தரித்தல் முறை என்றாலும் தந்தையின் உயிரணுவும் தாயின் கருமுட்டையும் சோதனைச் சாலையில் இணைக்கப்பட்டு Jenniferன் கருப்பைக்குள் வைக்கப்பட்டன. இந்நிலையில் ஒருநாள் DNA சோதனைக் கருவி ஒன்றை பெற்றோருக்கு பரிசாக வழங்கினார் Rebecca.

அந்த கருவி தங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகிறது என்பது தெரியாமல், அதை பயன்படுத்தி மூவரும் DNA சோதனை செய்து கொண்டனர். இரண்டு மாதங்களுக்குப்பிறகு சோதனையின் முடிவுகள் வெளியாகியபோது அந்த குடும்பத்திற்கு தாங்க இயலாத அளவு அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதலாவது Josephஇன் மரபு சார்ந்த விடயங்கள் எதுவுமே Rebeccaவிடம் இல்லை, அதாவது Rebecca, இந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே அல்ல என்பது தெரியவந்தது. அதிர்ச்சிக்குள்ளான குடும்பம் தனியாக தந்தையை அறியும் சோதனை ஒன்றை மேற்கொள்ள, Joseph, Rebeccaவின் தந்தையே அல்ல என்பது தெரியவர, குடும்பமே அதிர்ச்சியில் திக்கு முக்காடிப்போனது. Cincinnatiயிலுள்ள Institute for Reproductive Health மீது வழக்கு பதிவு செய்துள்ளார் Joseph.

அந்த மருத்துவமனை, யாரோ ஒருவரின் உயிரணுவை பயன்படுத்தி, Jenniferன் கருமுட்டையை கருவுறச் செய்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் Jenniferன் கருமுட்டையை கருவுறச் செய்ய பயன்படுத்தப்பட்ட உயிரணு, அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவருடையது என்பது தெரியவர, அந்த செய்தி Joseph குடும்பத்தில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டாக DNA சோதனை செய்து கொள்வதும், மருத்துவர்களே தங்களை நம்பி வருவோரின் வாழ்க்கையில் விளையாடுவதும் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கும் நிலையில், நகங்களை அழகு படுத்திக் கொள்ளும் சலூன்களில்கூட அதிக அளவில் விதிமுறைகள் வழக்கத்தில் உள்ள நிலையில், செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொள்வது, தங்களைப் போன்ற பலரது குடும்பங்களுக்கு நிரந்தர வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் Joseph.