சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில் அவரின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஹேம்நாத் தனது நீண்ட கால நண்பர் என்றும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் பற்றி காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் வழங்கியதாகவும் கூறியுள்ளார். மற்ற நண்பர்கள் சாட்சியளிக்க மறுத்த நிலையில் தான் மட்டுமே சாட்சி வழங்கியதாகவும் இதற்காக ஹேம்நாத் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டார்.
அவர் வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் உயர்நீதிமன்ற நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறையை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.