நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் செம்மரம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் ஆக்ஷனில் களமிறங்க மறு பக்கம் ராஸ்மிகா மந்தனா ரொமான்ஸில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர்களுக்கு இடையே ஒரு பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். “ஊ சொல்றியா மாமா”என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதற்கு இந்த பாடலும் சமந்தாவின் குத்தாட்டமும் ஒரு காரணம்தான். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தை எடுப்பதற்கு படக்குழு முடிவு செய்தது. இந்தத் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்க உள்ளார். முதல் பாகத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்துவிட்ட நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தில் அவர் வில்லனாக களமிறங்குகிறார்.

இந்நிலையில் பிரியாமணி இந்த திரைப்படத்தில் வில்லியாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் புஷ்பா 2 பாகம் படத்தில் வில்லியாக நடிக்க பட குழுவினர் பிரியாமணி இடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரியாமணி களமிறங்க உள்ளார். பிரியாமணி நடிப்பில் தற்போது கொட்டேஷன் கேங் என்ற திரைப்படம் தயாராகி வரும் நிலையில் ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் இவர் வில்லியாக களமிறங்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
