இறுதிச்சடங்கு முடிந்து குழிதோண்டி புதைக்கப்பட்ட நபர்: 15 நாட்கள் கழித்து நடந்த அதிசயம்

கேரளாவில் இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஜி என்பவர், வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.வழக்கமான நாட்களை விட அதிக நாட்கள் அவர் காணாமல் போனதால் பொலிசில் புகார் செய்தனர்.இந்நிலையில் கர்நாடக மாநிலம் பைரகுப்பா என்ற பகுதியில் சஜியை பார்த்ததாக சிலர் அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதற்கிடையே, பைரகுப்பா காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக பொலிசிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த உடலை பார்த்து சஜியின் சகோதரர் ஜினேஷ், இது அவர் உடல்தான் என்பதை உறுதியாகச் சொன்னார். முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த உடலின் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் தெரிந்தது.சஜிக்கும் அப்படியொரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது மேலும் சில அறிகுறிகளை வைத்து அது சஜிதான் என்று உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து,அவரது உடலை பெற்ற சகோதரர் உறவினர்கள் முன்னிலையில் புனித செபாஸ்டியன் தேவாலய கல்லறையில் புதைத்து விட்டனர். 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சஜி உயிரோடு வந்துள்ளார்.

அவரைக் கண்டதும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி. அப்படியென்றால் இறுதிச் சடங்கு செய்தது யாருடைய உடல்? என்று கேள்வி எழ இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.