நடிகை பாவனா கடந்த 2017ம் ஆண்டு ஓடும் காரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டனர் இதனைச் செய்த சிலர், பிறகு பாவனாவை கொச்சி அருகே இறக்கிவிட்டுச் சென்றனர். இந்த நிகழ்வை அவர்கள் வீடியோ பதிவும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டதாகக் கூறி நடிகர் திலீப்பை கைது செய்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் பழிவாங்கும் வகையில் இதனை செய்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

தற்சமயம் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான மெமரி கார்டு ஆதாரங்களையும், அதில் பதிவாகியுள்ள காட்சிகளையும் பார்க்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால், நீதிமன்றம் அனுமதி தரவில்லை. இதன்பேரில் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யவே, இந்த வழக்கு விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் 6 மாத இடைக்கால தடை விதித்தது. அத்துடன், எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வழக்கு தொடர்பான மெமரி கார்டு ஆதாரங்களையும், அதில் பதிவாகியுள்ள காட்சிகளையும் நடிகர் திலீப் பார்ப்பதற்கு, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஃபோன், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றில் பதிவான புகைப்பட, வீடியோ பதிவுகளை நகல் எடுத்து தரும்படி திலீப் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அவ்வாறு நகல் தர முடியாது என மறுத்த குற்றவியல் நீதிமன்றம், டிஜிட்டல் ஆவணங்களில் உள்ள காட்சிகளை வேண்டுமானால் பார்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, திலீப் மீண்டும் உச்சநீதிமன்ற உதவியை நாடியுள்ளார். இதேபோல, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில், 3 பேர் தங்களது வழக்கறிஞர்கள் உதவியுடன், தங்களுக்கும் இதேபோல டிஜிட்டல் ஆவண நகல் அளிக்கும்படி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
