ஜீவஜோதியின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹொட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தன் கடையில் பணிபுரிந்த மேலாளரின் மகள் ஜீவஜோதியை அடைய நினைத்தார். ஆனால் ஜீவஜோதி தான் காதலித்து வந்த பிரின்ஸ் சாந்தகுமாரை கரம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் கூலிப்படையை ஏவி பிரின்ஸ் சாந்தகுமாரை உலகை விட்டே அனுப்பினார் இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ராஜகோபாலுக்கு ஆயுள்தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜகோபால் கடந்த ஜூலை 18ஆம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டாவதாக தண்டபாணி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜீவஜோதி வேறு ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். நாகப்பட்டினத்தின் வேதாரண்யத்தை சேர்ந்த எஸ். வேதராசு என்பவரிடம் தன் சொத்துக்களை அடமான வைத்து ஜீவஜோதியும், தண்டபாணியும் கடன் வாங்கினர். பின்னர் வேதராசு வீட்டுக்குள் சென்று அவரை தாக்கிவிட்டு அடமான பத்திரத்தை ஜீவஜோதி மற்றும் தண்டபாணி எடுத்து சென்றுவிட்டதாகவும் பொலிசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் முன்ஜாமீன் பெற்ற நிலையில் நிபந்தனையை மீறிய இருவரும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவில்லை. எனவே அவர்களின் முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி வேதராசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சாப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகாரை வாபஸ் பெற வேண்டும் என வேதராசுவை
ஜீவஜோதியும், தண்டபாணியும் மிரட்டியதாகவும் இது குறித்து பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையில் ஜீவஜோதியின் வழக்கறிஞர் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரினார். இதையடுத்து இந்த விசாரணையை 11ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய ஜீவஜோதிக்கு உத்தரவிட்டார்.
