அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் புதுமாப்பிள்ளை வீட்டின் தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜோ மெல்கோசா (30). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் மணப்பெண் சகோதரி வீட்டருகில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது திருமணத்துக்கு அழைக்காமலேயே இரண்டு பேர் அங்கு வந்து பிரச்னை செய்ய தொடங்கினர். அவர்களை மணமகன் ஜோ தடுத்தார், பின்னர் சிறிது நேரத்தில் ஜோவும் அந்த இரண்டு மர்ம நபர்களும் மாயமானார்கள். இதன் பின்னர் மணப்பெண் சகோதரி வீட்டின் தோட்டத்தில் ஜோ சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.இது குறித்து ஜோவின் சகோதரர் ஆண்டி வேலாஸ்குஸ் கூறுகையில், அந்த இருவரையும் என் சகோதரன் ஜோ தடுத்தான், இதையடுத்து அவனை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் உயிரிழந்துள்ளார், அவன் மீது எந்த தவறும் கிடையாது.

இது போன்ற மரணம் அவனுக்கு ஏற்பட்டிருக்க கூடாது, அவனுக்கு ஒரு மகள் உள்ளார் என வேதனையுடன் கூறியுள்ளார். இதனிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரோனி ரமிரீஸ் (28) மற்றும் அவன் தம்பி ஜோஸ் ரமிரீஸ் (19) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த புதுமாப்பிள்ளையின் இறுதிச்சடங்குக்காக GoFundMe இணையதள பக்கம் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.