லண்டனில் சொகுசாக வசிக்கிறேன்! ஏமாற்றி வந்த இளைஞர் உண்மையில் எங்கு வாழ்ந்தார்? குட்டு வெளியானது

இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் தான் லண்டனில் பணிபுரிவதாக ஏமாற்றியதும், பொய்யாக கடத்தல் நாடகம் போட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் லண்டனில் தங்கி பணிபுரிவதோடு சொகுசாக வாழ்வதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இரண்டாண்டுகள் பெற்றோரை பிரிந்து இருந்ததால் அவர் லண்டனில் தான் உள்ளார் என பெற்றோர் நினைத்தனர். இந்நிலையில் பிரவீனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து அவரை ஊருக்கு வர கூறியுள்ளனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்துவிட்டதாக பிரவீன் தந்தைக்கு போன் செய்து கூறினார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கால் டாக்சி ஓட்டுனர் தன்னை கடத்தி சென்றுவிட்டதாக அழுது கொண்டே பீதியுடன் தந்தைக்கு மீண்டும் போன் செய்து கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக பொலிசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்துக்கு சென்ற பொலிசார் அங்கு சோதனை செய்ததில் பிரவீன் என்ற பெயரில் யாரும் லண்டனில் இருந்து வரவில்லை என தெரியவந்தது. மேலும் அவர் செல்போனை ஆய்வு செய்ததில் சென்னையில் இருப்பதாக சிக்னல் காட்டியது.

பின்னர் சென்னைக்கு சென்று பிரவீனை கண்டுபிடித்து பொலிசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, சென்னையில் இரண்டு வருடங்களாக இருந்து கொண்டு லண்டனில் இருப்பதாக ஏமாற்றி வந்துள்ளார் பிரவீன்.

மேலும் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் யாருமே தன்னை கடத்தாத போதும் பொய்யாக கடத்தல் நாடகம் போட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து பொலிசார் பிரவீனிடம் விசாரித்து வருகிறார்கள்.