7 ஆண்டு காதல் கணவன் நொடியில் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம்: வைரலாகும் பிரனய் – அம்ருதாவின் அழகிய திருமண வீடியோ

வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட 24 வயதான பிரனய் குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மாருதிராவ் இவரது மகள் அம்ருதா கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளார்.பிரனய் தாழ்ந்த சாதி நபர் என்பதால் இவர்களது திருமணத்திற்கு மாருதிராவ் சம்மதம் தெரிவிக்காததையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் பிரனய்யை திருமணம் செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து தனது மகளின் மீது கோபத்தில் இருந்த தந்தை மாருதிராவ்,தன் ஆசை மகளை தன்னிடம் பிரித்த பிரனய்யை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூலிப்படை மூலம் வெட்டிக்கொலை செய்துள்ளார்.அழகாக ஆரம்பித்த வாழ்க்கை இப்படி கொடூரமாக முடிந்துவிட்டது, பிரனய் எனக்கு கொடுத்துள்ள குழந்தையை நான் பெற்றெடுப்பேன். எனது கணவனுக்காக நீதி வேண்டி போராடுவேன் என கர்ப்பிணி மனைவியான அம்ருதா கூறியுள்ளார்.9 ஆம் வகுப்பில் ஆரம்பித்த காதல்முதன்முதலாக அம்ருதாவை சந்தித்த போது பிரனய் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் படித்த பள்ளியில் அம்ருதா ஜூனியர்.

இருவரது வீடும் இரண்டு தெருக்கள் இடைவெளியில் தான் இருந்தது. இதனால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடிந்தது.இருவரும் மெல்ல, மெல்ல காதல் வயப்பட்டார்கள். பள்ளிப் படிப்பை முடித்த பிரனய் தொழில் நுட்ப அறிவியல் படித்துள்ளார். அம்ருதா ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் இளங்கலை படித்துள்ளார்.பல வருடங்களாக இருந்த காதல் உறவு 2017ம் ஆண்டு அம்ருதாவின் வீட்டிற்கு தெரிந்திருக்கிறது.வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் அவரது மாமா, சித்தப்பா என அனைவரும் அம்ருதாவை கடுமையாக அடித்திருக்கிறார்கள். 6 மாதத்திற்கு மேலாக வீட்டுச் சிறையிலே வைத்திருந்திருக்கிறார்கள்.

இறுதியில், வீட்டை விட்டு வெளியேறி அம்ருதா, பிரனய்யை சந்தித்து தனது நிலையை எடுத்து கூறியிருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜியத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கர்ப்பம் தரித்த பிறகு நலகொண்டாவில் உள்ள மருத்துவமனையில்தான் பரிசோதனைக்காக வந்து சென்றிருக்கிறார்கள். அப்படியொரு நாள் பரிசோதனைக்காக வந்த போதுதான் இந்தக் கொடூர கொலை நடந்திருக்கிறது.

தங்களது 7 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் இவர்கள் நடத்திய போராட்டம் வீணாகிவிட்டது. தனது கண்ணெதிரிலேயே நொடிப்பொழுதில் காதல் கணவனை பறிகொடுத்துள்ளார். சமூகவலைதளங்களில் வெளியான இவர்களது புகைப்படத்தை வைத்தே ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த காதல் தெரிகிறது. தற்போது இவர்கள் திருமணத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.