தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் திரைப்பட விருதுகள் அறிவித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இது தடைப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு விருது வழங்கும் விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை களவாணர் அரங்கில் இதற்கான விழா நடைபெற்றது.விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் அவர்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. அந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, வெள்ளகோவில் சுவாமிநாதன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இதில் சினிமா நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்தில் நடித்ததற்காக பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் விருது வாங்குவதற்காக அவர் விழாவிற்கு வந்துள்ளார். ஆனால் அங்கு விருதுக்கான பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.
அதனால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன் அங்கிருந்து அதிகாரிகளை கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியானது. அதன் பிறகு அதிகாரிகள் நடந்த தவறை விசாரித்ததாகவும் பின்னர் நடந்த தவறை உணர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

அது மட்டுமல்லாமல் விருது காண பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்களை கண்டுபிடித்து லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பல பேருக்கு விருது வழங்கியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து விருது பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.