பல தமிழ் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகர் முத்துக்காளை. இடையில் மதுவுக்கு அடிமையான முத்துக்காளை அதிலிருந்து மீண்டு தற்போது மறுபிறவி எடுத்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஸ்டன்ட் மாஸ்டர் ஆகணும் என்ற ஆசையில் சென்னை வந்த எனக்கு கார்ப்பெண்டர் வேலை கிடைத்தது.

பின்னர் எப்படியோ நடிகர் வடிவேலு கூட்டத்தில் சேர்ந்து போண்டா மணி, அல்வா வாசு என ஒரு குழுவாக திரிந்தோம் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து கொண்டிருந்த போது குடிக்கு அடிமையாகிவிட்டேன். நானும் நடிகர் அல்வா வாசுவும் அதிகளவில் மது குடிப்போம். வடிவேலு ஒரு தடவை என் முகத்துக்கு நேராகவே, முதலில் அல்வா வாசு சாகப்போறான், அடுத்து நீ தான்னு சொன்னார். அதேபோல அல்வா வாசு திடீர்னு ஒருநாள் இறந்துட்டான்.

அன்னைக்கு தான் என் மனசுக்குள்ள அதுவரைக்கும் இல்லாத ஒரு பயம். இப்படியே இருந்தால் வாழ்க்கை என்னவாகும் என பயந்து குடியை நிறுத்தினேன். குடிப்பதை நிறுத்தி ஒரு ஆண்டு ஆக போகிறது. இப்போது சில திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
