இந்தியாவையே உலுக்கிய கத்துவா சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் திகதி காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டார். அப்பகுதியில் கோயில் ஒன்றில் வைத்து 4 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜனவரி 17-ஆம் திகதி சிதைவடைந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய கோவிலின் பூசாரியும் கிராம தலைவருமான சன்ஜி ராம்

அவரது மகன் விஷால், சிறுவன் ஒருவன், அவனது நண்பன் ஆனந்த் தத்தா, 2 சிறப்பு பொலிஸ் அதிகாரிகளான தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா ஆகியோரை குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், கிராம தலைவர் சன்ஜி ராமிடம் 4 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ஆதாரங்களை அழித்ததாக பொலிசாரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக 15 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினமும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் பஞ்சாப் பதன்கோட் மாவட்ட நீதிபதி தேஜ்விந்தர் சிங் இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட சன்ஜிராம், 2 பொலிசார் உள்ளிட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவன் மைனர் என்பதால் அவன் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.