இந்த வருடத்தில் உலகின் கடைசி நாள் இதுவா?… பீதியை கிளப்பும் மாயன் காலண்டர்…!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பல மக்களை காவு வாங்கி கொண்டிருக்கிறது. இந்த வருடம் 2020ம் ஆண்டை பலரும் மகிழ்ச்சியோடு தான் ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போதைய நிலைமை பலருக்கு அவ்வாறாக இல்லை. கொரோனா வைரஸ், வெட்டுக்கிளி படையெடுப்பு, பொருளாதார மந்தநிலை மற்றும் பிரபலங்களின் தொடர் மரணம் என 2020 மறக்க முடியாத பல சோக வடுக்களை ஏற்படுத்தி விட்டது. இந்த சூழ்நிலையில் மாயன் காலண்டர் மீண்டும் பீதியைக் கிளப்பியுள்ளது. 

உலகின் இறுதி நாள் எனும் சதிக் கோட்பாடுதான் பலரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பூமி சூரியனைச் சுற்றுவதன் அடிப்படையில் கிரிகோரியன் காலண்டர் வடிவமைக்கப்பட்டது. ஆனால். அதற்கு முன்பு ஜூலியன் காலண்டர் பரவலாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஜூலியன் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட போது, 11 நாள்களை நாம் இழந்து விட்டதாக நிபுணர்கள் கூறியுள்ளார்கள். மேலும், நிபுணர்களின் கூற்றுப்படி கணக்கீட்டில் இழந்த அந்த 11 நாள்களையும் கிரிகோரியன் காலண்டரில் சேர்த்துக் கணக்கீடு செய்தால், நாம் இப்போது 2020 – ல் இல்லாமல் 2012 – ல் இருப்போம், என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இதற்கிடையே விஞ்ஞானி பாலோ டாகலோகின் பதிவிட்டுள்ள ட்விட்டில், ”ஜூலியன் காலண்டர் அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியில் இப்போது நாம் 2012 – ல் இருப்போம். ஜூலியன் காலண்டரை கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் மாற்றம் செய்த போது நாம் 11 நாள்களை இழந்துவிட்டோம். கடந்த 268 ஆண்டுகளாக கிரிகோரியன் காலண்டர் பயன்பாட்டிலிருந்து வருகிறது. அதாவது 268 வருடங்களில், ஒவ்வொரு வருடத்துக்கும் 11 நாள்களைச் சேர்க்கும்போது 2948 நாள்கள் நமக்குக் கிடைக்கும். 2948 / 365 = 8 வருடங்கள்” என்று சொல்லப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கணக்கிடும் போது ஜூன் 21, 2020 ம் தேதி தான் டிசம்பர் 21, 2012 ஆக இருக்கும். இந்த டிசம்பர் 21ம் தேதியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதற்கு முக்கிய காரணம் மாயன் காலண்டர் அடிப்படையில், உலகில் உள்ள சதிக்கோட்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றாகச் சொன்னது, ”டிசம்பர் 21, 2012” தான் உலகத்தின் இறுதி நாள். அதன் அடிப்படையில் உலகம் அழியப்போகிறது என்ற சதிக் கோட்பாட்டுத் தகவல்கள் மீண்டும் வைரலாகத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து பேசிய நாசா அதிகாரி ஒருவர், ”உலகின் இறுதி நாள் என்ற சதிக் கோட்பாடானது பூமிக்கு வடக்கே, நிபுரு கிரகத்தின் அடிப்படையில் முதன் முதலில் தொடங்கியது. அதன் அடிப்படையில் உலகத்தின் பேரழிவு முதன் முதலில் மார்ச், 2003 – ல் நடக்கும் எனக் கூறினார்கள். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்காத நிலையில், மாயன் காலண்டர் அடிப்படையில் டிசம்பர் 2012 – ல் பேரழிவு நடக்கும் என்றார்கள்.

ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தற்போது ஜூன் 21, 2020 ம் தேதி தான் உலகத்தின் கடைசி நாள் எனக் கூறுகிறார்கள்” என அந்த அதிகாரி கூறியுள்ளார். ஏற்கனவே மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வரும் நேரத்தில், இந்த தகவல் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. அதே நேரத்தில் ஜூன் 21 – ம் தேதிக்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியுள்ளது.