உத்திரப்பிரதேச மாநிலத்தில் நொய்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு நிஷா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய தூரத்து உறவினரின் பெயர் சுனில். இவரும் நொய்டாவிற்கு இடம்பெயர்ந்தார். இருவருக்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. குடும்பத்தினர் திருமணத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்கள் கழித்து நிஷா தன் குடும்பத்தினரிடம் தான் திருமணம் செய்து கொண்டதை கூறியுள்ளார். சுனில் தூரத்து உறவினர் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த திருமணம் குறித்த வாக்குவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில் நேற்றிரவு நிஷா மொட்டை மாடியில் தனியாக படுத்து கிடந்தார். அப்போது அவருடைய உறவினர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் பெரிதாகி கொண்டு போனது. அப்போது யாரும் எதிர்பாராவிதமாக நிஷா மீது தோட்டா பாய்ந்துள்ளது. நிலைகுலைந்த நிஷா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது சந்தேகமிருந்ததால் அவர்கள் கைது செய்துள்ளனர். நிஷாவின் கணவரான சுனில், “சொந்த வீடு கட்டினால் எங்கள் திருமணத்தை ஒப்புக்கொள்வதாக நிஷாவின் தந்தை கூறினார்.
அதை நிறைவேற்றியும் அவர் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஷாவின் குடும்பத்தினர் தான் அவரை இப்படி செய்துள்ளனர்” என்று காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவமானது நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
