19 வயது அநாதை இளைஞனுக்கு தானம் செய்த சீதா..! உறவுகள் கைவிட்ட நிலையில் உயிர் கொடுத்து நெகிழ்ச்சி..! கண்களை கலங்க வைக்கும் சம்பவம்!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். 11ம் வகுப்பு படித்த இவர் பெற்றோரை இழந்து அனாதையாக வாடும் இவருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டாலும், அவருக்கு பெற்றோர் இல்லை என்பதால், பாட்டியின் உதவியுடன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சையில்எந்த முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் ஜெயகிருஷ்ணனின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த மருத்துவர்கள் ஆலோசித்தனர்.

ஆனால், ஜெயகிருஷ்ணனுக்கு உதவி செய்ய, உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. அத்துடன், ஜெயகிருஷ்ணனையும், அவரது பாட்டியையும் வீட்டை விட்டு வெளியேறும்படி உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.   இந்நிலையில், அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பை அறிந்த அண்டை வீட்டில் வசிக்கும் சமூக ஆர்வலர் பிஜூ, வீடு தேடிச் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறுவனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தவும், விரைவில் தனி வீடு ஒன்றை கட்டித்தரவும் வாக்குறுதி அளித்த பிஜூ, தனது தயா அறக்கட்டளை மூலமாக, பலரிடமும் உதவி நாடினார். இதனை கேள்விப்பட்ட கோட்டயத்தை சேர்ந்த சீதா தம்பி என்ற பெண், தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தார்.

47 வயதான சீதா தம்பி, தனது குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு, கொச்சியில் உள்ள மெடிக்கல் டிரஸ்ட் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தார். அங்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சீதாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுநீரகம், ஜெயகிருஷ்ணனின் உடலில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதற்காக மொத்தம் 15 லட்சம் ரூபாய் செலவானது. இந்த பணத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்த தயா அறக்கட்டளை, தற்போது சிறுவனுக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுதவிர, சிறுநீரகத்தை தானமாக அளித்த சீதா தம்பி,

தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சிறுவன் ஜெயகிருஷ்ணனை தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார். தனது வாழ்க்கையில் இது மிகவும் எதிர்பாராத ஆச்சரிய தருணம் எனக் குறிப்பிடும் ஜெயகிருஷ்ணன், விரைவில் பள்ளிப்படிப்பை மீண்டும் தொடர உள்ளதாக, நம்பிககை தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்து வாடும் சிறுவனை, உறவினர்கள் புறக்கணித்தாலும், சக மனிதர்கள் மாறி மாறி உதவி செய்து உயிரை காப்பாற்றிய இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது…