ஷாருக்கான் ஆவலாக காத்திருப்பது எதற்காக என்று தெரியுமா – டிவிட்டர் பதிவில் அவரே சொன்ன தகவல் இது…

பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர்தான். நடிகர் ஷாருக்கான், தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், உயிரே என்ற படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், இதில் மனிஷா கொய்ராலா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து, ஹேராம் படத்தில், கமலின் நண்பராக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் மிக சிறப்பான நடிப்பை தந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.தற்போது தமிழில் ராஜா ராணி, தெறி, பிகில் படங்களை எடுத்த இயக்குநர் அட்லீ இயக்கிய ஜவான் படத்தில், ஷாருக்கான் நடித்திருந்தார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. படத்தின் வசூல், ஆயிரம் கோடி ரூபாயை கடந்த நிலையில், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்ற நிலையில், படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது.ஜவான் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவரது ரசிகர்கள் பலரும் ஜவான் படத்தின் வெற்றிக்காக, ஷாருக்கானுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது விஜய் ரசிகர் ஒருவரும், டிவிட்டரில் ஷாருக்கானுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஷாருக்கான், தளபதியின் அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன், என பதில் அளித்துள்ளார். இந்த பதிவு, விஜய் ரசிகர்களிடையே டிரெண்டிங் ஆகி வைரலாக பரவி வருகிறது.