சித்தா படம் பிரேமாஷன் நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு – பாதியில் வெளியேறிய நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த், பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். பாய்ஸ் படத்தில், ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷங்கரின் அறிமுகம் என்பதால், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிசெய்தவர். பாய்ஸ் படத்தை தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தில் மாதவன், சூர்யா ஆகியோருடன் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.தொடர்ந்து ஜிகர்தண்டா, தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி, உதயம், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம், அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்த சித்தார்த், இப்போது சித்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சித்தார்த் பங்கேற்று, ரசிகர்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று பெங்களூருவில் இதுபோன்ற ஒரு பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சித்தார்த், மேடையில் இருந்தபடி அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறை சார்ந்தவர்களிடம் இந்த படம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென, அங்கு வந்த கன்னட அமைப்பினர், இந்த பிரமோசன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், காவிரி நீர் திறப்பு பிரச்னையில், பந்த் நடந்துக்கொண்டிருக்கும்போது இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவையில்லை, என்று கண்டனம் தெரிவித்து பேசினர். இதையடுத்து அங்கிருந்தவர்களுக்கு நன்றி மட்டும் தெரிவித்துவிட்டு, சித்தார்த் உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார். இது, அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.