தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாடல் எழுதி வருபவர் தான் கபிலன் .இவரின் பாடலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை ஏராளமான பாடல்கள் எழுதியுள்ள இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். புதுவையை பூர்வீகமாகக் கொண்ட இவர் பாடல் எழுதும் ஆர்வத்துடன் சென்னைக்கு வந்து பல முயற்சிகளுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தில் இடம்பெற்ற உன் சமையலறையில் என்ற பாடலை எழுதும் வாய்ப்பை பெற்றார்.

தனது முதல் படத்திலேயே திறமையான பாடல் வரிகளால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் விரைவில் வெளியாக உள்ள பிசாசு மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் கபிலன் .இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கபிலனின் மகள் தூரிகை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 27 வயதாகும் தூரிகை பிரபல ஆங்கில மேகசீனில் எழுத்தாளராகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்தவர்.

தற்கொலை செய்யக்கூடாது என்று பல பதிவுகளை போட்ட தூரிகை தற்கொலை செய்து கொண்டது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மகள் இறந்த துக்கத்தில் இருந்த கபிலன் அவரின் நினைவில் துடிக்க தனது மகளை நினைத்து கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அதற்கு பலரும் ஆறுதலாக கமாண்ட் செய்து வருகிறார்கள்.
